Thursday 1 August 2013

ரிஷி மூலம்: பராசர மகரிஷி



பரம பாகவதர் பராசரர் வேதவியாசரின் தந்தை. இராமபிரானுடைய மூதாதையர்களில் இரகு மஹாராஜாவிலிருந்து தகப்பனார் தசரதர் வளர, மேன்மைபெற்ற இவ்வரசர்களுக்குக் குல குருவாகவும் புரோகிதராகவும் ப்ரும நிஷ்டராகவுமம் விளங்கிய மஹான் வசிஷ்டரின் பேரன் பராசரர்; சக்தியின் மகன்.
இச்சக்தியின் மைந்தன் வேதங்களை அதன் பொருளறிந்து ஓதுவதிலும் திரும்ப அவற்றைப் பற்றி எந்த இடத்தில் கேட்டாலும் எடுத்து இயம்பக்கூடிய ஆற்றலும் பெற்றிருந்தார். அதற்குக் காரணம், தாயின் கர்பத்திலிருக்கையிலேயே தந்தை கூறும் வேதங்களின் சாரமான சப்தத்தைக் கிரகித்துக்கொண்டவர். பிரஹலாதன், பரீக்ஷித் போன்ற கர்ப்ப ஸ்ரீமான், தாயின் வயிற்றில் இருக்கையிலேயே பிரும்மஞானம் பெற்றவர்.

ஒருசமயம் வசிஷ்டர் தன் மகன் சக்தி இறந்தான் என்ற செய்திகேட்டு, புத்ர சோகம் மேலிட்டவராய், இனி இருப்பதில் வெறுப்புற்று இறந்துவிட நினைத்து, மாலை இருட்டியதும் வழக்கத்திற்குமாறாக, கங்கை நதியில் இறங்கிட எண்ணிக் கண்ணீர் சிந்தியபடி தளர்ந்த நடையுடன், நதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வருகையில் பின்பக்கம் வேதம் திருத்தமாகச் சுருதியோடு, தன் மகன் சக்தியின் குரலாகவே காதில் தெளிவாகக் கேட்டது. நின்று கேட்டார், பின் திரும்பினார். ஆச்சரியப்பட்டார். 'அம்மா குழந்தாய்! எவ்வாறு துணையின்றி வந்தாய்? எதற்காக வந்தாய்? உனக்கு என்னம்மா வேண்டும்? உனக்கல்லவோ இவ்வுலக வாழ்வு போனது. இனி மாண்டு போனவன் திரும்பானே, கர்ப்ப ஸ்திரியான நீ ஏன் என்னைப் பின்தொடர்ந்தாய்' என்னும் குரல் ஒலித்தது. சற்று உற்று நோக்கினார். திரும்பவும் நன்கு உச்சரிப்போடு வேத சப்தம் அருகிலேயே கேட்டது. சப்தம் வரும் வகையை உணர்ந்துகொண்டார். மருமகளின் ஒளிபொருந்திய சாந்தமான முகத்தைப் பார்த்துச் சொல் குழந்தாய், என்றார். மருமகளின் வயிற்றிலிருந்து வேதசப்தம் வந்தது. பிறக்கும் முன்பாகவே வேதம் முறைப்படி நவின்றது அச்சிசு. அவள் வணங்கி தாழ்ந்த குரலில் அமைதியாக, துக்கம் குரல்வளையைத் தடுக்க, நாபேசயெழாமல் பிரயத்தனத்தால் வெளி கொண்டுவந்து பேச, கண்களில் நீரைத் தேக்கி நிறுத்தி, நெஞ்சு வலியைப் பொறுத்துக் கொண்டு, 'அருந்ததி அம்மா, உங்களைப் பின்தொடரும்படி கூறி அனுப்பினார், இழப்பு மிகப் பெரியது. துக்கமும் மிகுந்தது. ஏதாகிலும் உங்களுக்குச் சித்தம் சலித்து ஆபத்து வராமல் இருக்கும் பொருட்டே, சிறிது நேரமாக உங்களை அதனால் நிழல்போல் தொடர்ந்து வருகிறேன். உம்மையே துணையாகக் கொண்டேன்' என்று பணிவோடு கூறினாள்.
வசிஷ்டர் ஆசையையும் கோபத்தையும் எப்பொழுதோவிட்டு விட்டுப் பொறுமையே பூஷணமாகக் கொண்டவர். பேரறிவான ஞானத்தை ஏழு வயதேயான இராமச்சந்திர மூர்த்திக்குப் போதித்தவர். தசரத சக்ரவர்த்தியின் மூதாதையருக்குக் குலகுரு. இரகு வம்சத்துக்கு மகத்தான அறவழி பேணி பயிலக் கற்றுத் தந்ததுடன் ப்ரோகிதராகவும் இருந்தவர். இவர் இப்படி மகனை எண்ணித் துக்கப்படுவது மனித இயல்பு. நிதானித்துச் சற்று சிந்தனை வசப்பட்டார். அரங்கநாதரைத் தியானித்துத் தனது ஆச்ரமம் திரும்பினார். உலக நன்மையின் பொருட்டு, சக்தியைப் பேணி வளர்த்ததுபோல், இப்பேரப்பிள்ளையையும் வளர்ப்பேன் என உறுதி பூண்டார்.
'அருந்ததி கேள், தெய்வாம்சமாக பிறக்க இருக்கும் சக்தியின் மகவு வேதம் நவிந்து என்னைப் பாவத்திலிருந்து மீட்டு ஆச்ரமத்திற்கு அழைத்து வந்தது' என்றார். பெரும்பாவம் செய்ய எண்ணுகையில், மருமகளின் சோகத்தையோ உங்கள் இருவரது விருப்போடும் தனிமையையோ சக்தியின் மறைவு உனக்கும் துக்கமேயென்றும்கூட எண்ணவில்லை. நீ மருமகளை நிழலாகத் தொடர்ந்துவர பணித்ததாலேயே தெளிவு பெற்றேன்.' என்றார்.
நிறைமாதமானது பேரன் உலகமுய்யப் பிறந்தான். தாத்தாவான வசிஷ்டர் அச் சிசுவிற்குச் செய்ய வேண்டிய சமஸ்காரங்களைத் தந்தையாக ஏற்றுச் செவ்வனே செய்து முடித்தார். சிசு பிறந்ததும் அந்தணர்களுக்கு விர தானம், கோ தானம், பொன், பொருள் தானங்கள் செய்தார். காப்பிட்டு, தொட்டிலிட்டுப் பராசரர் என்று பெயரிட்டுச் சீராட்டி அருந்ததி தம்பதிகள் மகிழ்ந்தனர். மெல்லத் தவழந்து படி தாண்டியதும் படியில் இலந்தைப் பழம் காசுகள் இட்டு உருட்டச்செய்தனர். திருஷ்டி சுற்றினர். பழத்தையும் காசுகளையும் சிறுவருக்கு அளித்தனர். தளர் நடை நடக்கையில், நடைபழக இருகைகளையும் பிடித்தவாறு கூட நடந்தார். அக்ஷ்ரபிரும்மத்தைக் கர்ப்பத்திலேயே அறிந்த மகவிற்கு அக்ஷராப்பியாசம் செய்வித்தார். மழலை சொல் கேட்டு மகிழ்ந்தனர், நான்கு வயதானதும் உபநயனம் செய்து வேதம் ஓத அதிகாரியாக்கினார். சகல வேதங்களையும் ஐயமின்றி நன்கு கற்றான் பராசரர். உபநயனத்திற்குப்பின் வேதங்களை அதிவேகமாக, ஆழமாக மனத்தில் நிறுத்திக்கொண்டான்.
எங்குச் சென்றாலும் தாத்தா அவனைக்கூட அழைத்துப்போவார். வேள்விகள் இயற்றும் முறை அறிந்தான். வானிலைக்காட்டி வான சாஸ்திரமும் ஜோதிடமும் கற்றுவைத்தார். ஆறுசமயமும் அறுபத்து நான்கு கலைகளையும் செவ்வனே பயின்று மேதாவியாகத் திகழ்ந்தான். பராசர ஸ்மிருதியென்று விளங்கும் நூல் இயற்றினான். மேதாவிலாசமும் கண்களில் ஒளியும், நடையில் கம்பீரமும், ப்ரும்மச்சரிய தேஜஸும் கொண்ட இளைமை பருவம் கண்ட வசிஷ்டர் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து, நல்ல பெண்ணை தேடி மணம் செய்து வைக்க விரும்பினார். ஆனால் பராசரருக்கு மணம் செய்துகொள்ளவே மனமில்லை. மானிட ஜன்மம் வீணாக ஆகாமல், ஆழ்ந்து பயின்ற கல்வி அத்தனையும் ஆத்மஞானம் பெறவேயென்று திடமாக இருந்தான். ஆகவே, தாத்தா மணம் செய்துவைக்க சம்மதம் கேட்டதும் அறவே மறுத்துவிட்டான்.
ஓபராசரா! இல்லறம் நல்லறமே ஏன் மறுக்கிறாய்? உன்னுடைய வேத அறிவுத் திறன் உன்னால் உண்டாக்கபடும் சிசுவிற்குக் கிடைக்குமே, அதனால் உலகில் வேத தர்மம் காக்கப்படுமல்லவா? வேதமே வாழவழி வகுக்கும் பிரமாண மல்லவா யாவருக்கும். ஆகையால் உலக நன்மையின் பொருட்டு நீ உத்தம பிரஜை உண்டாக்கத் தகுந்தவன், மணம் செய்து கொள்வாயாக' என்றார். மேலும் கூறுவார் பராசரா, உனக்கு விருப்பமில்லையென்றால் கட்டாயப்படுத்துவது சரியல்ல என்று மிகுந்த வருத்தத்தோடு சென்னார்.
தந்தையின் ஸ்தானம் வகித்து, மிகுந்த அன்புடன் யாவும் கற்றுத்தந்து, தனக்காகவே வாழ்ந்துவரும் தாத்தாவிடம் சாந்தமாகப் பதில் கூறுகிறார் பராசரன். ஆத்ம போதமடைந்து இந்த உயர்ந்த மானிடப் பிறவி பயனுற்றுத் திரும்ப பிறவாது ஆவதல்லவா? உத்தமம். ஆனால், தங்கள் ஆசையைத் தவிர்க்க இயலவில்லை. இனி வரும் கலிநலிய வேதப் புனருத்தாரணம் செய்வது அவசியமே. மானிடம் சிறக்க, சராசரம் யாவும் நன்மை பெற்று விளங்க, தாங்கள் விளம்பியபடி சத்புத்திரன் உண்டாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும். தங்கள் விருப்பப்படியே கர்ப்பாதானம் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஆத்ம ஞானம் பெற இல்லற வாழ்வு தடையென நினைக்கிறேன். வேதம் விளம்பியபடி சத்புத்திரன் உண்டாக்க விதிகளைச் சொல்லுங்கள். என்னால் மணந்துகொள்ள இயலாது. இல்லறமும் அவசியமில்லை. அக்காலமும், பருவமும் பகவத் கிருபையால் சேருமானால் அப்படிப்பட்ட மாதிடம் அத்தருணம் வீணாகாமல் கர்ப்பாதானம் செய்து உமது வாக்கை நிறைவேற்றி, உம்மைச் சந்தோஷப்படுத்துவேன் என்றான்.
வசிஷ்டர் வேதத்திலுள்ள விதிகளைக் கூறுகிறார். பிரும்மச்சரியம் இருவருக்கும் இருக்க வேண்டும். உடற்கூற்றில் இருவருக்கும் ஐந்து பூதம் இயக்கச் சுத்தம், வெளிச் சூழ் நிலையை உணரும் தூய்மையோடு இருத்தல், கிரகநிலை அமைந்தால் மனமொன்றுதல், குணநலன் இருவருக்கும் இன்னவேளை சேர்ந்தால் இன்னபடி குணம் கொண்ட சிசு உண்டாகுமென்று இரண்யகசிபு இரண்யாக்ஷன் பிறப்பினால் அறிவாயல்லவா? சேரும் வேளை திருச்சந்தியாக இருக்கலாகாதுயெனப் பலவாறு உள்ளபடி உகந்து உரைத்தார் வசிஷ்டர்.
பருவமும் அவசியம். போகம் நன்கு அமைய இவ்வாறு இயற்கையின் நோக்கால் அனுபவத்திலும் உண்டெனக் காண்கிறோமென்றார். சிறிது காலம் எனக்கு அவகாசம் தாருங்களெனப் பராசரர் கேட்டுக்கொண்டான்.
சில காலம் சென்றபின், கங்கைக் கரையோரம் அக்கரைக்குப்போக படகு தேடிச் செல்லுகையில் படகு செலுத்தும் ஒரு மீனவப் பெண்ணைக் காண்கிறார் பராசரர். அவளுடன் பேசி அவளுடைய விருத்தாந்தங்களை அறிகிறார். தாத்தா கூறிய வேத விதிகளை எண்ணிப் பார்க்கின்றார். பின்பு அவளிடம் 'கட்டுக் கோப்பான வாலிபமான உடலும், அங்கலட்சண அழகிய அமைப்பும் பருவ மங்கையாக இருக்கும் உனக்கு உலகம் புகழும் சத்புத்திரன் வேண்டுமா? நூறு வயது இருக்கக்கூடிய ஆயுள் ஆரோக்கியம் கொண்ட சிறந்த மகவு வேண்டுமா? சொல்' என்கிறார்.
மச்சகந்தியென்ற களங்கமற்ற அந்தப் பெண் சொல்கிறாள் 'ஆம் சுவாமி, சிறந்த மகவு அவசியம் வேண்டும், ஆனால், நல்ல கணவன் வாய்க்க நீங்கள் அருள் புரிய வேண்டும்' என்றாள்.
இத்தருணம் இயற்கை எழிலின் அமைப்பு, குளிர்ந்த வேளை, கோளங்கள் இருப்பு, ப்ரும்ம முகூர்த்த உயர் நன்மைதரும் காலம், எல்லாம் நன்கு அமைந்திருக்கிறது. நீ விரும்பினால் நானே அச்சிசுவிற்கு தந்தை ஸ்தானத்தை வகித்து, கர்ப்பாதானம் செய்யத் தயாராக உள்ளேன் உன் சம்மதம் தெரிவிப்பாயாக என்றார்,
மச்சகந்தி 'ஐயனே, நீர் மிகப் பெரிய மஹானாகத் தோன்றுகிறீர். நீர் அறியாதது ஒன்றுமில்லை. கற்றுணர்ந்த அந்தணர் மரபில் வந்தவராகத் தெரிகிறீர். படகோட்டும் குலத்தில் வந்தவள் யான். கடலிலுள்ள மீன்களை ஆகாரமாக உண்பவள். தாயற்ற எனக்கு தந்தையே எல்லாம். ஆகையால் அவரிடம் கேட்காமல் உம்முடன் மகவிற்காக இணைவது தவறல்லவா? மேலும் ஒருதரம் குழந்தை பிறந்த பிறகு தேகப் பொலிவு குறைந்து பருவம் மாறுமே, பின்பு யாரும் என்னை மணக்க இசையமாட்டார்களன்றோ' என்றாள்.
இத்தருணத்தை வீணடிக்காது என்னுடன் கலவிசெய்வாயானால் நன் மகவு பெற வாய்ப்பு உண்டாம். பிறகு எனது தவ வலிமையால் உன்னை இப்போது இருக்கும் வாளிப்பான உடம்பேயிருக்கும்படி செய்ய இயலும். உனது தந்தை இதற்கு ஒப்புதல் தருவார். தாமதம் செய்வது காரிய ஹானி என்றார். சம்மதம் தெரிவித்தாள் மச்சகந்தி.
படகை நதி நடுவில் செலுத்தச் சொல்லி, அவளையும் பரிமளகாந்தியாக்கி, பனி மூட்டத்தை உண்டாக்கி, நிறைந்த சம்போகம் தந்து, சிறந்த வேளையில் கூடி, அரங்கநாதரைப் பிரார்த்தித்து ஆண்மகவிற்காகக் கர்ப்பாதானம் செய்தார்.
மகவு பிறந்த பின் மறுபடியும் அவளுடைய வாளிப்பான தேகம் கிடைக்கும்படியும் செய்தார் பராசரர். மகவை ரிஷிகளின் ஆச்ரமத்தில் வளரும்படி செய்துவிட்டு, வசிஷ்டரிடம் வந்து எல்லாவற்றையும் கூறினார். வசிஷ்டர் கொள்ளுபேரன் வளருமிடம் சென்றார். விஷ்ணு அம்சமாக இருக்கும் அக்குழந்தையைக் கண்டு ஆனந்தித்து வியாசரெனப் பெயரிட்டார்.
பின்பு பராசரர் சதா பகவானை ஆராதித்து ஆத்மலாபமடைந்தார்.

No comments:

Post a Comment